Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு ஜவுளி சந்தையில் ரூ.7 கோடிக்கு வர்த்தகம்

ஈரோடு: தீபாவளி பண்டிகையையொட்டி, ஈரோடு ஜவுளி வாரச்சந்தையில் ரூ.7 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற இச்சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மொத்த விலைக்கு துணிகளை கொள்முதல் செய்வது வழக்கம். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சிறு,குறு வியாபாரிகள் வந்து துணிகளை கொள்முதல் செய்வார்கள்.

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த சில வாரங்களாக ஜவுளி வார சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் ஈரோடு ஜவுளி வார சந்தைக்கு வந்து துணிகளை கொள்முதல் செய்தனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் நேற்று இரவு ஜவுளி வாரச்சந்தை கூடியது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் பகுதி, ஸ்டேட் பேங்க் ரோடு பகுதியில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கடைகளை அமைத்திருந்தனர்.

கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வெளி மாநில வியாபாரிகள் நூற்றுக்கணக்கானோர் துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்து வாங்கி சென்றனர். இதனால் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த சிறு,குறு வியாபாரிகளும் துணிகளை போட்டிப்போட்டு வாங்கி சென்றனர். வழக்கமாக சாதாரண நாட்களில் ஜவுளி வார சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரூ.7 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாகவும், வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறுகையில், ‘‘தீபாவளி சமயங்களில் ஜவுளி வார சந்தையில் வழக்கத்தைவிட வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். ஈரோடு ஜவுளி வார சந்தையில் கடந்த வாரம் முதலே தீபாவளி பண்டிகையை ஒட்டி வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மொத்த வியாபாரம் 50 சதவீதமும், சில்லறை வியாபாரம் 60 சதவீதம் நடைபெற்றது. குழந்தைகள் முதல் முதியவர்களுக்கு என்று தனித்தனியாக ரகங்களில் துணிகள் அதிக அளவில் வந்திருந்தன. அவை அனைத்தும் சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தது’’ என்றனர்.