டேபிள் டென்னிஸ் பெண்கள் பிரிவில் சாம்பியன் ஆன முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் திவ்யான்ஷி. 1989 முதல் நடத்தப்படும் இத்தொடரின் யூத் பெண்கள் பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்தியர் திவ்யான்ஷி. உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் 29ஆவது ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் யு 15 மகளிர் பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷி இறுதிச் சுற்றில் 4-2 என்ற கணக்கில் சீனாவின் ஸூகியுஹியை வீழ்த்தி 36 ஆண்டுகளில் முதன்முறையாக தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார். இந்த வெற்றி மூலம் உலக யூத் சாம்பியன்ஷிப்புக்கும் தகுதி பெற்றுள்ளார். இப்போட்டியில் ஒரு தங்கம், வெள்ளி, 2 வெண்கலத்துடன் இந்தியா நாடு திரும்பியுள்ளது.
மும்பை கண்டிவாலியில் பிறந்த திவ்யான்ஷி பத்தாம் வகுப்பு படிக்கிறார். கொரோனா தடை காலத்தில் அவரது தந்தை வீட்டிற்குள்ளேயே டேபிள் டென்னிஸ் அட்டையை வைத்து பயிற்சிக் கொடுத்திருக்கிறார். துவக்கத்தில் சற்று ஆர்வமில்லாமல் இருந்தாலும், நாள்தோறும் 4‑5 மணி நேர பயிற்சியால் அவருடைய திறமையை வளர்த்துக் கொண்டார். அவரது தந்தை ரகுல் பௌமிக் மற்றும் அவரது சகோதரி உட்பட மூவருக்கும் தினமும் இதுதான் வேலை. ருமேனியாவில் நடக்கவிருக்கும் உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்று கோப்பை வாங்குவதே திவ்யான்ஷியின் கனவு. தொடர்ந்து ஒலிம்பிக்கிலும் பதக்கம் பெற வேண்டும் என பட்டியலிடுகிறார் இந்த இளம் சாதனை மங்கை திவ்யான்ஷி.