Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

விவாகரத்து வழக்கு முடிவுக்கு வராத நிலையில் 2வது திருமணம் செய்ய முயன்ற கணவனை சுற்றிவளைத்த மனைவி: மணமேடையில் நடந்த தள்ளுமுள்ளுவால் பரபரப்பு

பஸ்தி: விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற மணமகனை, முதல் மனைவி ஆதாரங்களுடன் தடுத்து நிறுத்திய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினய் ஆனந்த் சர்மா என்பவரும், குஜராத்தின் அங்கலேஷ்வரைச் சேர்ந்த ரேஷ்மா என்பவரும் படிக்கும் காலத்தில் காதலித்து, கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நாளடைவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை ஏற்பட்டதால், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த வழக்கு இன்னும் முடிவடையாத நிலையில், இருவருக்கும் சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை.

இந்த நிலையில், தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பிய வினய்க்கு, அவரது பெற்றோர் வேறு ஒரு பெண்ணுடன் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி, சமீபத்தில் நடந்த திருமண விழாவில், மாப்பிள்ளை ஊர்வலத்துடன் வினய் கோலாகலமாக திருமண மண்டபத்திற்கு வந்தார். அங்கு மாலை மாற்றும் சடங்கு முடிந்தவுடன் மணமேடையில் அமர்ந்திருந்தபோது, தனது குடும்பத்தினருடன் ரேஷ்மா அதிரடியாக நுழைந்தார். மணமேடையில் ஏறிய அவர், வினயுடன் தனக்கு நடந்த திருமணப் புகைப்படங்களைக் கூட்டத்தினரிடம் காட்டி கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வினய் தனது வங்கிக் கணக்கில் இருந்து பெருமளவு பணத்தை எடுத்ததாகவும், தனது பெயரில் கார் வாங்கியதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் திருமணத்தை உடனடியாக நிறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, மணமகன் வினயை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்வதாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். சட்டப்பூர்வ நடவடிக்கை முடியும் வரை திருமணத்தை நடத்த அனுமதிக்க மாட்டோம் என இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.