*கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்கள்
பெரம்பலூர் : பெரம்பலூரில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக மாவட்ட அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக, மாவட்ட அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை) செல்வக்குமார், (தனியார் பள்ளிகள்) லதா, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமைஆசிரியர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பெரம்பலூர் முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இந்தக் கண்காட்சியில், வெண்பாவூர் அரசு உயர் நிலைப்பள்ளி சார்பாக தேவையற்ற குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரித்தல், நெய்க்குப்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்புகள், நன்மைகள்; கல்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி சார்பாக சந்திராயன் விண்கலம் செயல்படும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி சார்பாக ஒளி விளக்கு மூலம் கொசுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்துதல், பசும்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளி சார்பாக பிளாஸ்டிக் தவிர்த்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வேப்பந்தட்டை அரசு மேல் நிலைப்பள்ளி சார்பாக திடக் கழிவு மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக மழைக்காலங்களில் ஹைட்ராலிக் முறையில் கார்கள் நனையாமல், சேதமாகாமல் பாதுகாக்கும் முறை, புது வேட்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி சார்பாக இதயத்தின் ரத்த ஓட்டம் தொடர்பாகவும், ஜமீன் பேரையூர் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பாக மாசடைந்த நீரை வடிகட்டி மறுசுழற்சிக் காக பயன்படுத்தும் முறை பற்றியும், கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக நிலநடுக்கம் கண்டறியும் கருவி பற்றியும் என பெரம்பலூர் மாவட்ட அளவில் 22 அறிவியல் படைப்புகள் இடம் பெற்றிருந்தன.
இந்த அறிவியல் கண்காட்சியில் வைக்கப் பட்டிருந்த படைப்புகளை நடுவர் குழுவினர் பார்வையிட்டு சிறந்த படைப்புகளை மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்தனர். பெரம்பலூர் மாவட்ட அளவில் சிறந்த அறிவியல் படைப்புகளாக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் படைப்புகள் மாநிலஅளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


