தொலைதூர மற்றும் இணையவழி படிப்புகளுக்கு அனுமதி: உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை: பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில்(2025-26) பிப்ரவரி மாத பருவச் சேர்க்கைக்கான இணைய வழி, தொலைதூரப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் தற்போது நடைபெறுகின்றன. இதையடுத்து யுஜிசி ஒழுங்குமுறை விதிமுறைகளின் அடிப்படையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் தொலைத்தூர மற்றும் இணைய வழியிலான படிப்புகளை கற்றுதர அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றன. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த நவம்பர் 10ம் தேதியுடன் நிறைவுபெற்றது. ஆனால், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நவம்பர் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தகுதியான உயர்கல்வி நிறுவனங்கள் /deb.ugc.ac.in/ எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நகலை உரிய ஆவணங்களுடன் நவம்பர் 30ம் தேதிக்குள் யுஜிசி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். அதன்பின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
