மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தி பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மன்னிப்பு கேட்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் எச்சரிக்கை
சென்னை: தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக செயலாளர் ஆதிராஜாராம், சென்னை தலைமை செயலகத்தில் பேட்டியளிக்கும் போது, மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர் தீபக்நாதன் கூறியதாவது: அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், உள்ளாட்சி அமைப்புகளை அவங்க கையிலே வைத்து விட்டு, 3வது படித்தவங்களை, நொண்டியை, மொடத்த, படிக்காதவங்களை பிஎல்ஓக்களாக போட்டு விட்டு என்று பேசியுள்ளார். மாற்றுத்திறனாளிகளை எந்த வார்த்தையில் எல்லாம் பேசக்கூடாதோ, அந்த வார்த்தைகளை எல்லாம் பேசியிருக்கிறார். இழிவாக பேசியிருக்கிறார் ஆதிராஜாராம்.
இத்தனை ஆண்டு காலம் கட்சியில் இருந்து இருக்கிறேன் என்று சொல்றீங்களே? இது எங்கே இருந்து பிறந்து வந்தது தெரியுமா? எம்ஜிஆர் வழித்தோன்றலாக உங்களை பிதற்றி கொள்கிறீர்களே? அப்படியிருக்கும் போது எப்படி இந்த வார்த்தைகளை பேச துணிந்து இருக்கிறீர்கள். மானமும், அறிவும் மனிதருக்கு அழகு என்று சொல்லியிருக்கக்கூடிய பெரியாரின் வழித்தோன்றலில் வந்தவர்களாக நீங்கள் இருக்கிறீர்களா?. யார் கற்று கொடுத்தார்கள் இந்த அரசியலை, சமூக நீதி அரசியல் என்றால் என்ன என்று தெரியுமா உங்களுக்கு.
சமூக நீதியின் முதல் பாடம் மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். நீங்கள் எல்லாம் ஒரு மாவட்ட செயலாளரா?. இது தான் உங்கள் அரசியல் கட்சி சொல்லியிருக்கிறதா? இந்த வார்த்தைகளை நீங்கள் பின்வாங்க வில்லை என்றால், இந்த இழிச்சொற்களை நீங்கள் பின்வாங்கவில்லை என்றால், பகிரங்க மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நிச்சயமாக உங்கள் இல்லத்திலே நாங்கள் போராட்டம் நடத்துதற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் தயங்காது. என்ன பேச்சு இது. யார் உங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


