Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிஜிட்டல் கைது தொடர்பான வழக்கில் அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!

டெல்லி: டிஜிட்டல் கைது தொடர்பான வழக்கில் அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போலி நீதிமன்ற உத்தரவுகளின் பெயரில் டிஜிட்டல் கைது மோசடி நடப்பது தொடர்பாக

ஹரியானாவைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் இருவர், எழுதிய கடிதத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு நடத்தி வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சூர்ய காந்த், பாக்ஸி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக நாடு முழுவதும் பல வழக்குகள் உள்ளன என்றும், நாடு முழுவதும் உள்ள வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க விரும்புகிறோம் என்றும் நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.

மேலும், டிஜிட்டல் கைது முறைகேடுகள் நாடு முழுவதும், நாடு கடந்தும் நடக்கின்றன என அவர் தெரிவித்தார். இந்த வழக்கை ஒன்றிய விசாரணை அமைப்புகளுக்கு மாற்றுவது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். டிஜிட்டல் கைது மோசடி என்பது ஒரு சர்வதேச பிரச்சனை, மியான்மர் நாட்டில் மோசடி கும்பல் ஒடுக்கப்பட்டுள்ளது என நீதிபதி பாக்ஸி தெரிவித்தார். டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக ஏற்கனவே சில வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது என ஒன்றிய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு எண்ணிக்கையை பார்க்கும்போது சிபிஐ விசாரிக்க ஆட்கள் மற்றும் தொழில்நுட்ப வசதி உள்ளனவா என அறிய விரும்புகிறோம் என்றும், காவல்துறை அல்லாத தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவி தேவையென்றால் நீதிமன்றத்தை சிபிஐ நாடலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் பிரிவின் வல்லுநர்கள் உதவியை சிபிஐ ஏற்கனவே பெற்று வருகிறது என வாதம் முன்வைக்கப்பட்டது.