Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிஜிபி பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்க கோரிக்கை பிரமோத் குமார் ஐபிஎஸ் வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பிரமோத் குமார் ஐபிஎஸ் மனு ஒன்றை தாக்கல்.செய்திருந்தார். அதில், ‘‘தற்பொழுது தமிழ்நாடு டிஜிபி பதவிக்கு தனது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. காரணம் வரும் செப்டம்பர் மாதத்துடன் நான் ஓய்வு பெற இருப்பதால் தனது பெயர் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. குறைந்தபட்சம் ஆறு மாதம் பதவி காலம் இருந்தால் தான் டிஜிபி பதவிக்கு பரிந்துரைக்க முடியும் என்ற விதிமுறையில் தளர்வுகளை மேற்கொண்டு தனது பெயரையும் பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து மேற்கண்ட மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று கடந்த 18ம் தேதி நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘நடப்பாண்டு செப்டம்பர் இறுதியில் ஓய்வுபெறும் நிலையில் இருக்கும் போது எவ்வாறு டி.ஜி.பி பதவிக்கு உங்களது பெயரை பரிசீலனை செய்ய முடியும். அது சாத்தியம் கிடையாது. எனவே இந்த விவகாரத்தில் பிரமோத் குமார் ஐபிஎஸ் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது’’ என்று தெரிவித்த தலைமை நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.