புதிய டிஜிபி நியமனம் தமிழ்நாடு பட்டியலை விரைந்து பரிசீலிக்க வேண்டும்: யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபி நியமனம் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை மீறி உள்ளது எனக்கூறி தமிழ்நாடு அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘டிஜிபி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது என்று தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பிறப்பித்த உத்தரவில், ‘‘தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபியை ஏன் நியமனம் செய்தீர்கள்.
யு.பி.எஸ்.சியிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரையில் அடிப்படையில் வழக்கமான டி.ஜி.பியை நியமனம் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் அனுப்பி வைக்கப்படும் பட்டியலை விரைந்து பரிசீலித்து யுபிஎஸ்சி நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இதுதொடர்பான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.