ஆனி மாத பவுர்ணமியையொட்டி தி.மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: அண்ணாமலையாரை தரிசிக்க 6 மணி நேரம் காத்திருப்பு
திருவண்ணாமலை: ஆனி மாத பவுர்ணமியான இன்று காலை முதல் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதுவதால் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி ஆனி மாத பவுர்ணமி இன்று அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி, நாளை அதிகாலை 3.08 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடை திறக்கும் முன்பே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று அதிகாலை முதல் இரவு 10 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தொடர்ச்சியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இலவச தரிசன வரிசையில் ராஜகோபுரத்தை கடந்தும், கட்டண தரிசன வரிசையில் அம்மணியம்மன் கோபுரத்தை கடந்தும் மாடவீதி வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல், சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதேபோல் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது. மேலும் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து காட்பாடி, விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. மேலும் பவுர்ணமி முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.