Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமியொட்டி விடியவிடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்று வழிபட்டனர். இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்காக கூட்டம் அலைமோதியது. 5மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக அண்ணாமலையார் திருக்கோயில் திகழ்கிறது. இங்கு காட்சிதரும் மலையே மகேசன் திருவடிவமாகும். அதனால், அண்ணாமலையை (கிரி) வலம் வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். அதிலும் பவுர்ணமியன்று கிரிவலம் சென்று வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று பகல் 2.43 மணிக்கு தொடங்கி, இன்று பகல் 2.18 மணிக்கு நிறைவடைகிறது.

இதையொட்டி நேற்று காலை முதலே அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதைதொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். மாலைக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக உயர்ந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க சன்னதிகள், இடுக்கு பிள்ளையார் கோயில்களில் வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

2வது நாளாக இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோபூஜை நடந்தது. தொடர்ந்து அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தொடர்ந்து இன்றும் பக்தர்கள் குவிந்தனர். ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயில் வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. கிரிவல பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து சுமார் 1200 சிறப்பு பஸ்களும், சென்னையில் இருந்து காட்பாடி மற்றும் விழிப்புரம் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கிரிவலம் முடித்த பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல இன்றுகாலை பஸ்நிலையங்களில் குவிந்தனர். அதேபோல் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம், காட்பாடி, சென்னைக்கு செல்லும் ரயில்களில் இடம் பிடிக்க முண்டியடித்து ஏறினர்.