Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள்: கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் டெட் தேர்ச்சி அடைந்தவர்கள் மற்றும் பெற வேண்டியவர்கள்விவரங்களை அனுப்பி வைக்க பள்ளிக்கல்வி அறிவுறுத்தியுள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில்(டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நடைமுறை தமிழகத்தில் 2011ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அதன்பின் தமிழகத்தில் டெட் தேர்ச்சி அடிப்படையிலேயே ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட செயல்பாடுகள் தொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. மேலும், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் டெட் தேர்ச்சி அடைந்தவர்கள் மற்றும் பெற வேண்டியவர்கள் தொடர்பான தகவல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் தொகுத்து அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளது.