Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துணை குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன்: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

சென்னை: துணை குடியரசுத் துணைத் தலைவர் பெருமை சேர்க்கும் வகையில் சி.பி.ராதாகிருஷ்ணன் செயல்படுவார் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநராகப் பதவி வகிக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் தேர்வு, சரியான மற்றும் தகுதியான ஒரு முடிவு என்று குறிப்பிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அன்புமணி தனது அறிக்கையில், சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் பொதுவாழ்க்கை அனுபவத்தையும், நேர்மையையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். திருப்பூரில் பிறந்த இவர், இரண்டு முறை கோவை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதுவே அவரது மக்கள் செல்வாக்குக்குச் சான்றாகும்.மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் ஆளுநராகவும், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பொறுப்பு ஆளுநராகவும் சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. இந்திய தென்னை நார் வாரியத் தலைவராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எல்.கே. அத்வானி மற்றும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி போன்ற பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.

மிக முக்கியமாக, பொதுவாழ்க்கையில் இதுவரை எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காதவர் என்று அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது தூய்மையான அரசியல் வாழ்க்கை இந்தப் பதவிக்கு ஒரு கூடுதல் தகுதியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் என்பவர் மாநிலங்களவைத் தலைவராகவும் செயல்படுவார். இந்த முக்கியப் பொறுப்பை வகிப்பதற்கான அனைத்துத் தகுதிகளும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உண்டு என்று அன்புமணி ராமதாஸ் உறுதியாகத் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்லும் பண்பு அவரிடம் இருப்பதால், மாநிலங்களவையைச் சிறப்பாக வழிநடத்துவார் என்றும், இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான இந்தப் பதவிக்கு அவர் பெருமை சேர்ப்பார் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.