சென்னை: கலை பண்பாட்டு துறையின் வாயிலாக ஓவிய மற்றும் சிற்பக் கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில் சென்னையில் ஓவியம் மற்றும் சிற்ப கலை படைப்புகளை காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ‘ஓவிய சந்தை’ திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை அடிப்படையில் சென்னையில், இந்த மாதம் 3 நாட்கள் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஓவியம் மற்றும் சிற்ப கலை படைப்புகளை காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ஓவிய சந்தை நடத்த, கலை பண்பாட்டு துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த ஓவிய, சிற்ப கலைஞர்கள் இத்திட்டத்தில் பயன்பெற ஏதுவாக, தாங்கள் காட்சிப்படுத்தி, விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ள கலைப்படைப்புகளின் விவரங்கள், அதற்குரிய புகைப்படங்கள், கலை படைப்புகளின் விற்பனை தொகை ஆகிய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை, வருகிற 15ம் தேதிக்குள் இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை கலை பண்பாட்டு துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.