தமிழ்நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படாமல் பாதுகாப்போம் எஸ்ஐஆர் சதி என்பதால் எதிர்க்கிறோம்: வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படாமல் பாதுகாப்போம். எஸ்ஐஆர், சதி என்பதால் எதிர்க்கிறோம் என்று வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்து உள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) ஏன்? எதிர்க்கிறோம்? என்பது தொடர்பாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நம்முடைய தொடர் எதிர்ப்புகளையும் மீறி, எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கிவிட்டது.
மக்கள் நிறைய பேருக்கு, எஸ்.ஐ.ஆர். பற்றி இன்னும் முழுதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், எஸ்.ஐ.ஆரை திமுக ஏன் எதிர்க்கிறோம் என்று விளக்கவும், நம்முடைய வாக்குரிமையை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று வழிகாட்டவும்தான் இந்த வீடியோ. சரியான, உண்மையான வாக்காளர் பட்டியல் தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. எனவே, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், போதுமான கால அவகாசம் தராமல், தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில், இதை அவசர அவசரமாக செய்வது சரியாக இருக்காது என்பதுதான் நம்முடைய நிலைப்பாடு.
தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து, வாக்காளர் பட்டியலில் பாஜ எப்படியெல்லாம் மோசடி செய்திருக்கிறது என்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சகோதரர் ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, ஏற்கனவே விளக்கியிருக்கிறார். கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயனும், மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தாவும் கூட இந்த எஸ்.ஐ.ஆரை தீவிரமாக எதிர்க்கிறார்கள். நாமும், எஸ்.ஐ.ஆர். அறிவித்தபோதே, இது சதி என்று உணர்ந்து எதிர்த்தோம். கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசினோம். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டித் தீர்மானம் போட்டோம்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறோம். வரும் 11ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்களை அறிவித்திருக்கிறோம். அதற்கு முன்பு, எஸ்.ஐ.ஆருக்காக வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்திலேயே எத்தனை பிரச்னைகள், குழப்பங்கள் இருக்கிறது என்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இதோ, எனக்குக் கூட, இந்த எனுமரேஷன் பார்ம் கொடுத்திருக்கிறார்கள். உங்களில் சிலர் கையிலும் இந்த பார்ம் இந்நேரம் வந்து சேர்ந்திருக்கும். இதில், முதலில் நம்முடைய விவரங்களைக் கேட்கிறார்கள்.
அதற்கு அடுத்தபடியாக, முந்தைய வாக்காளர் திருத்தப் பட்டியலில் உள்ள வாக்காளரின் உறவினரின் பெயர் கேட்கப்பட்டிருக்கிறது. உறவினர் என்றால் யார்? அப்பாவா? அம்மாவா? அண்ணனா? தங்கையா? கணவனா? மனைவியா? பிள்ளைகளா? யார்? அனைவரும்தானே வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள். இதில் ஏதாவது தெளிவு இருக்கிறதா? வாக்காளரின் உறவினர் பெயர் என்று சொல்லப்பட்டிருக்கும் இடத்தில், முதலில் பெயரும், பிறகு, வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டை எண் என்றும் கேட்கப்பட்டிருக்கிறது.
மூன்றாவதாக, மீண்டும் உறவினர் பெயர் என்று கேட்கப்பட்டிருக்கிறது. முதலில் யார் பெயரை எழுத வேண்டும்? எந்த வாக்காளர் விண்ணப்பிக்கிறாரோ அவர் பெயரா? அல்லது உறவினர் பெயரா? சிறிய தவறு இருந்தால் கூட, தேர்தல் ஆணையம் அந்தப் படிவத்தை ஏற்றுக் கொள்ளாமல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கிடும் ஆபத்து இருக்கிறது. நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. நன்றாகப் படித்த, அறிவார்ந்த, பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட, இந்தக் கணக்கீட்டுப் படிவத்தைப் பார்த்தால் அவர்களுக்கு தலை சுற்றிவிடும்.
இந்தப் படிவத்தில் வாக்காளரின் புகைப்படத்தை அச்சிட்டு, “தற்போதைய புகைப்படத்தை ஒட்டவும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், மாநில தலைமை தேர்தல் அதிகாரி என்ன சொல்கிறார், “உங்களுக்கு விருப்பமிருந்தால் ஒட்டலாம்” என்று அரசியல் கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். இது இன்னொரு இடியாப்ப சிக்கல். ஒருவேளை, போட்டோ ஒட்டவில்லை என்றால், என்ன நடக்கும்? வாக்குரிமை பறிக்கப்படுமா? பறிக்கப்படாதா? தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரி, அதாவது இஆர்ஓ கையில்தான் இந்த முடிவு இருக்கிறது, இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான முடிவை எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, சில அதி மேதாவிகள், “இந்த எஸ்.ஐ.ஆர். பணியை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் பணியாளர்கள்தானே? பிறகு ஏன் திமுக எதிர்க்க வேண்டும்?” என்று புரிதலற்ற, உண்மைக்குப் புறம்பான விவரங்களை வைத்துப் பேசுகிறார்கள். ஒரு பணியாளரைத் தேர்தல் ஆணையம் தன்னுடைய பணிக்காக எடுத்த நொடியில் இருந்தே, அவர் தேர்தல் ஆணையத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் செயல்படுவாரே ஒழிய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார். மக்களை திசைதிருப்பினால் போதும் என்று தவறான தகவலைப் பரப்பக் கூடாது.
ஏதாவது பொய் சொல்லி, எஸ்.ஐ.ஆரை எப்படியாவது நடத்திடலாமா? ஏழை எளிய மக்களின் வாக்குரிமையை நீக்கிவிடலாமா? என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது வேதனைக்குரியது. ஒரு தொகுதியின் இஆர்ஓ மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை, இத்தனை குறுகிய கால அவகாசத்தில் எவ்வாறு கொடுத்து வாங்குவார்? வாங்கினால் வேலை முடிந்ததா? அதுவும் இல்லை. அதைக் கணினிமயமாக்கி, வரும் டிசம்பர் 7ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.
போகிற போக்கைப் பார்த்தால், எவ்வாறு இதையெல்லாம் செய்து முடிக்கப்போகிறார்கள்? என்று தோன்றுகிறது. அதிக அளவிலான வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற அச்சம் இதன் மூலம் உறுதியாகிறது. பிஎல்ஓக்கள் தங்களின் பணியைச் சரிவர செய்யவில்லை என்றால், இந்த எஸ்.ஐ.ஆர். பணியே மொத்தமாக பாதிப்பைச் சந்திக்கும். பிஎல்ஓக்களும், கட்சிகளின் பிஎல்ஏ2க்களும் இணைந்து செயல்படத் தேவையான அனைத்தையும் செய்வோம் என்று தேர்தல் ஆணையர் சொன்னார். அவ்வாறு சொன்னார்களே தவிர, அவ்வாறு ஒரு சூழலை இதுவரை உருவாக்கவே இல்லை.
தி.மு.க. பிஎல்ஏ2 தயாராக இருந்தாலும் கூட, பல இடங்களில் பிஎல்ஓ-க்கள் வராமல் இருக்கிறார்கள். இதையெல்லாம் மீறித்தான் நம்முடைய செயல்வீரர்கள் விழிப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். “உங்களின் வாக்கு நீக்கப்படுமா?” என்று கேட்டால், அவ்வாறு ஒரு அபாயம் நிச்சயம் இருக்கிறது, இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதைத் தடுக்க வேண்டும் என்றால், உங்கள் பகுதிக்குரிய பிஎல்ஓ, யார்? என்று கேட்டு, அவரிடம் இருந்து கணக்கீட்டுப் படிவத்தை வாங்கி, சரியாக நிரப்பி, திரும்பச் சமர்ப்பிக்க வேண்டும். தற்போதைய நிலையிலான எஸ்.ஐ.ஆர்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமைக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு. இதை எதிர்கொள்ளத் திமுக சார்பில் உதவி மையம் அமைத்திருக்கிறோம். நாங்கள் அறிவித்திருக்கும் 08065420020 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு விழிப்புடன் இருந்து, தமிழ்நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படாமல் பாதுகாப்போம். எஸ்.ஐ.ஆரின் சதிவலையில் சிக்காமல் நம்முடைய வாக்குரிமையை நிலைநாட்டுவோம். இவ்வாறு அவர் வீடியோவில் பேசியுள்ளார்.
* தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து, வாக்காளர் பட்டியலில் பாஜ எப்படியெல்லாம் மோசடி செய்திருக்கிறது என்று, ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, ஏற்கனவே விளக்கியிருக்கிறார்.
* நன்றாகப் படித்த, அறிவார்ந்த, பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட, இந்தக் கணக்கீட்டுப் படிவத்தைப் பார்த்தால் அவர்களுக்கு தலை சுற்றிவிடும்.
* “உங்களின் வாக்கு நீக்கப்படுமா?” என்று கேட்டால், அவ்வாறு ஒரு அபாயம் நிச்சயம் இருக்கிறது, இல்லை என்று சொல்லிவிட முடியாது.

