விவாகரத்து பெறுவதற்கு காரணமாக இருந்த கள்ளக்காதலி அல்லது காதலனிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரலாம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
புதுடெல்லி: டெல்லியில் தனது கணவரின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தங்கள் திருமண வாழ்வில் தெரிந்தே தலையிட்டதாகக் கூறி தனது கணவரின் சக ஊழியரிடம் இருந்து ரூ.4 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விரிவாக விசாரித்த நீதிமன்றம் வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்,‘‘கணவன் அல்லது மனைவியின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் (கள்ளத் தொடர்பு) ஈடுபடும் மூன்றாவது நபர்(கள்ளக்காதலி அல்லது கள்ளக்காதலன்) மீது, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் (கணவர் அல்லது மனைவி) நஷ்டஈடு கோரி உரிமையியல் வழக்குத் தொடரலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு என்பது குற்றச்செயல் கிடையாது என்று முன்னதாக உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் அது குற்றமாகாது என்றாலும், அதுவே தம்பதிகளுக்கு இடையிலான திருமண முறிவுக்கு காரணமாக அமையும் பட்சத்தில், அதனால் ஏற்படும் சட்டரீதியான பாதிப்புகளுக்கு இழப்பீடு கோர முடியும்’’ என கூறியது.