புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு வழங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. ரேகா குப்தாவை, சகாரியா என்பவர் தாக்க முயன்ற நிகழ்வால் இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு குறித்து சர்ச்சை எழுந்ததால் ஒன்றிய அரசு திரும்பப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி முதல்வர் ரேகா குப்தா தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து அவருக்கு இசட் பிரிவு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அரசின் ஒப்புதலை அடுத்து, டெல்லியில் உள்ள ரேகா குப்தாவின் இல்லத்துக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள், டெல்லி போலீசாரிடம் இருந்து பாதுகாப்பை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர். முதல்வருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகரான டெல்லியில் நிலவும் அரசியல் பரபரப்பைக் கருத்தில் கொண்டு முதல்வரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பு என்பது ஒன்றிய அரசால் வழங்கப்படும் உயரிய பாதுகாப்புகளில் ஒன்றாக உள்ளது. அருகில் இருந்து பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள், இடத்துக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள், வாகனம் மற்றும் துணை வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் உட்பட சுமார் 20 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள். அதிக அச்சுறுத்தல் உள்ள நபர்களுக்கே இத்தகைய பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம்.
முதல்வர் ரேகா குப்தா டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், பொது மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தபோது அங்கு வந்த குஜராத்தின் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் சக்ரியா என்பவர், முதல்வரிடம் புகார் மனு அளிப்பது போல் நெருங்கி திடீரென அவரை கன்னத்தில் அறைந்தார்.
முதல்வரை தள்ளிவிட்டபின், அவரது தலை முடியை பிடித்தும் இழுத்தார். முதல்வரின் பாதுகாவலர்கள் பாய்ந்து சென்று ராஜேஷ் சக்ரியாவை பிடித்து மடக்கினர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி முதல்வரை தாக்கிய விவகாரத்தில் குஜராத்தைச் சேர்ந்த 41 வயதான ராஜேஷ் கிம்ஜி என்பவரை போலீசார் கைது செய்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயம் அடைந்த டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு வழங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு குறித்து சர்ச்சை எழுந்ததால் ஒன்றிய அரசு திரும்பப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.