டெல்லி: டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை அடுத்து 29 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைத்தனர். தீ விபத்தில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு பஸ்தி என்றழைக்கப்படும் மிகவும் மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதியில், கடந்த வியாழக்கிழமை இரவு 10:56 மணிக்கு இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. எல்பிஜி சிலிண்டர்கள் வெடித்ததன் காரணமாக தீயின் தீவிரம் மேலும் அதிகரித்தது.
ரிதாலா மெட்ரோ நிலையம் மற்றும் டெல்லி ஜலபோர்டு அலுவலகங்களுக்கு இடையே அமைந்துள்ள பெங்களூரு பஸ்தி பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகளின் குவியலில் இருந்து தீப்பிடிக்கத் தொடங்கியதாகத் கூறப்படுகிறது. இதில் சுமார் 400 முதல் 500 குடிசைகள் தீயில் எரிந்து நாசமானதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்து தீயின் தீவிரத்தை 'மிதமான' (Medium) பிரிவில் வகைப்படுத்தி 29 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. சுமார் 6 மணி நேரக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்து தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

