Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு!

டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. தினமும் 1,550க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருவதால் அதிக போக்குவரத்துள்ள விமான நிலையமாக இது உள்ளது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் தாக்கம் இன்னும் தொடர்கிறது. தானியங்கி செய்தி மாற்று அமைப்பு சிஸ்டம் மீட்டெடுக்கப்பட்ட போதிலும், 700-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகி வருகின்றன. அதிகாலையில் ATC சிஸ்டம் செயலிழந்ததால் விமான நிலையத்தில் பெரும் குழப்பம் நிலவியதுடன், பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை சுமார் 5:45 மணியளவில் தானியங்கி செய்தி மாற்று அமைப்பு(AMSS) அமைப்பில் கடுமையான கோளாறு ஏற்பட்டது. இந்த அமைப்பு விமானத் திட்டமிடல் மற்றும் தானியங்கி கண்காணிப்பு அமைப்புக்கு தரவுகளை வழங்குகிறது. சிஸ்டம் நிறுத்தப்பட்டதால், ATC கையேடு முறையில் (Manual Mode) செயல்பட வேண்டியிருந்தது, இதனால் செயல்பாடுகள் மிகவும் தாமதமாகியது.

இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் போன்ற அனைத்து முக்கிய விமான நிறுவனங்களும் ATC சிஸ்டம் செயலிழந்ததால் தங்கள் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தன. டெல்லி விமான நிலையம் தினசரி 1,550-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குவதால், சிஸ்டத்தில் ஏற்பட்ட இந்த கோளாறின் தாக்கமாக 700க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

புறப்படும் விமானங்கள் சராசரியாக 50 நிமிடம் முதல் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாகின்றன. வரும் விமானங்களின் அட்டவணையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தின் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.