டெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு டெல்லி அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. தலைநகர் டெல்லியின் மிகவும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியும், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமுமான செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் நடந்த சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், பாகிஸ்தானை மையமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என வலுவாக சந்தேகிக்கப்படுகிறது.
டெல்லி கார் வெடிப்பு வழக்கை, தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. இந்த சம்பவத்தில், பயங்கரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், வழக்கு என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் டெல்லி கார் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு டெல்லி அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார். பலத்த காயம் அடைந்து நிரந்தரமாக செயல்பட முடியாத நிலைக்கு ஆளானவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைக்கு அரசு பொறுப்பேற்கும் என்றும் கூறினார்.
