Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் 3 தீவிரவாத டாக்டர்கள் உட்பட 4 பேரை கைது செய்தது என்ஐஏ: 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளிகளான 3 டாக்டர்கள் மற்றும் மத பிரச்சாரகரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று கைது செய்தது. டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடந்த கார் வெடிகுண்டு தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலியாகினர். காரில் வெடிபொருட்களுடன் தாக்குதலை நடத்திய காஷ்மீர் டாக்டர் உமர் உன் நபி உடல் சிதறி இறந்தான்.

இந்த வழக்கில் டாக்டர்கள் குழு தீவிரவாத சதித்திட்டம் தீட்டியது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக காஷ்மீர் போலீசார், அரியானா அல் பலா பல்கலைக்கழக பேராசிரியர் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முசம்மில் ஷகீல் கனாயி, அனந்த்நக்கை சேர்ந்த டாக்டர் அதீல் அகமது, லக்னோவை சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சயீத் மற்றும் மத பிரச்சாரகர் மால்வி இர்பான் அகமது வாகே ஆகியோரை கைது செய்திருந்தனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான இவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று கைது செய்தது. 4 பேரையும் டெல்லிக்கு அழைத்து வந்த என்ஐஏ அதிகாரிகள் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 4 பேரையும் 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதுவரை டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆகி உள்ளது. இதற்கு முன், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார் பதிவாகி இருந்த அமிர் ரஷித் அலி என்பவனையும், ஹமாஸ் பாணியில் டிரோன் தாக்குதல் நடத்த தொழில்நுட்ப உதவிகளை செய்ததாக ஜாசிர் பிலால் வானி எனும் டேனிஷையும் என்ஐஏ கைது செய்திருந்தது.

* அல் பலா குழு நிறுவனரின் பூர்வீக வீட்டிற்கு நோட்டீஸ்

டெல்லி குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புடைய அரியானாவின் அல் பலா பல்கலைக்கழகம் மற்றும் அதன் குழுமத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை ரூ.415 கோடி கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டு குழும நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கை கைது செய்துள்ளது. இந்நிலையில், சித்திக்கின் குடும்ப பூர்வீக வீடு மத்தியபிரதேசத்தின் மோவ் பகுதியில் உள்ளது.

இந்த வீடு அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக மோவ் கன்டோன்மென்ட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. ஏற்கனவே 1996, 1997ல் பலமுறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அடுத்த 3 நாளில் வீட்டை இடிக்காவிட்டால் கன்டோன்மென்ட் சார்பில் வீட்டை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.