டெல்லி: டெல்லி ரோஹினி பகுதியில் பிகாரைச் சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லி காவல்துறையினரின் என்கவுண்டரில் இன்று(23-10-2025)அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர். பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் போது வன்முறையை அரங்கேற்ற சதித் திட்டம் தீட்டியிருந்ததாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
பிகாரின் பிரபல ரவுடியான ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக வன்முறையை அரங்கேற்ற சதித் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதனடிப்படையில், பிகார் காவல்துறையினரும் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினரும் இணைந்து இன்று அதிகாலை 2.20 மணியளவில் டெல்லி ரோஹினி பகுதியில் சந்தேகத்தின் பேரில் சிலரை சோதனை செய்துள்ளனர்.
அப்போது, காவல்துறையினர் மீது நான்கு ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு காவல்துறையினரின் நடத்திய பதில் தாக்குதலில் ரஞ்சன் பதக், பிம்லேஷ் சாஹ்னி (25), மனிஷ் பதக் (33), அமன் தாக்குர் (21) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். நால்வரையும் ரோஹினி மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்ற நிலையில், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர்.
மேலும், என்கவுன்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரும் பிகாரில் கொலை, ஆயுதக் கடத்தல் உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என டெல்லி குற்றப்பிரிவு துணை ஆணையர் சஞ்சீவ் யாதவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, என்கவுண்டர் நடத்தப்பட்ட இடத்தை டெல்லி மற்றும் பிகாரைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.