டெல்லிக்கும் செல்லும்போதெல்லாம் எடப்பாடி பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மர்மம் என்ன? : திமுக கேள்வி
சென்னை: டெல்லிக்கும் செல்லும்போதெல்லாம் பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மர்மம் என்ன? என்று எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் கள்ளக் கார் பயணங்களும், கேள்விகளும் என்ற தலைப்பில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லியில் அமித்ஷா வீட்டுக்கு வெள்ளை நிற அரசு வாகனத்தில் சென்றதாக சொல்லும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திரும்பி வரும்போது எப்படி ரூ.8 கோடி மதிப்புள்ள கருப்பு நிற தனியார் சொகுசு காரில் வந்தார்?.
டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மர்மம் என்ன?. கட்சி தொடர்பான சந்திப்பு என்றால் கட்சியினர் உடனிருக்க வேண்டும், அரசு அலுவல் என்றால் அதிகாரிகள் உடனிருக்க வேண்டும். தனிப்பட்ட குடும்ப நிகழ்வென்றால் குடும்பத்தினர் இருக்கலாம்! ஆனால் அமித்ஷா இல்லத்தில் இருந்து வெளியே வந்த காரில் பழனிசாமி உடன் இருந்தது யார்?. பழனிசாமியுடன் இருப்பவர் யார்? அவர் ஏன் தன் முகத்தை மறைக்க வேண்டும். அமைச்சருக்கு நிகரான கண்ணியமிக்க தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் பழனிசாமி, தனது முகத்தை மறைத்துக் கொண்டு அமித்ஷா இல்லத்திலிருந்து வெளியேறுவது ஏன்?. என்ன அவசியம்? என்ன நிர்பந்தம்? எதை மறைக்கிறார்? யாரை மறைக்கிறார்?.செய்தியாளர் சந்திப்பில் தடுமாறும் பழனிச்சாமியிடம் இந்த கேள்விகளுக்கு பதிலுண்டா?." என தெரிவிக்கப்பட்டுள்ளது.