சென்னை: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது; "மியான்மர் கடற்கரை அருகே உருவாகியுள்ள தாழ்வு மண்டலம் இன்னும் புயல் நிலைக்கு வரவில்லை என்றாலும், அதன் இயக்கம் தென்மேற்குக் கரை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் வடகிழக்கு மற்றும் கிழக்கு கடலோர மாவட்டங்கள், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி, கடலூர், மதுரை ஆகிய பகுதிகளில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடற்கரைப் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வாக மாறியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு (நவம்பர் 4 முதல் 10 வரை) தமிழ்நாட்டில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும். சில பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.குறிப்பாக, கடலோர பகுதிகளில் மழை தீவிரம் அதிகரிக்கும்" என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
