Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு காஞ்சிக்கு நாளை கனமழை எச்சரிக்கை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானி பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று, அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவியது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

இது (ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்), நேற்று காலை 8.30 மணி அளவில் மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில், கோபால்பூரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 160 கிலோ மீட்டர் தொலைவிலும், கலிங்கப்பட்டினத்தில் இருந்து கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு வடகிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், பாராதீப்பில் இருந்து தெற்கு-தென்மேற்கே 280 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப்பகுதிகளில், கோபல்பூர் மற்றும் பாராதீப்பிற்கு இடையே இரவு கரையை கடக்கக்கூடும்.

இன்று. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.