Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தம் உருவானது; 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: செங்கல்பட்டுக்கு ரெட், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. மேலும் வங்ககடலில் உருவான காற்றழுத்த பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதால் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதால், மழை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கி வருகிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் புதுச்சேரி முதல் ராமநாதபுரம் வரை கடலோர பகுதிகளிலும் மற்றும் காவிரி படுகை மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. அன்று அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. இதனால் நகரில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. மழை பாதிப்புகள் எங்கும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் மழையை சமாளிக்க சென்னை மாநகராட்சி, சென்னை போலீஸ், தீயணைப்புத்துறை ஆகியோர் இணைந்து செயலாற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளனர்.

மழை காரணமாக ராமேஸ்வரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல், இன்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, வங்கக் கடலில் நேற்று காலை 5.30 மணிக்கு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும். இன்று மதியம் வேளைக்குள் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின், மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. எனவே, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடதமிழகம் நோக்கி மாற வாய்ப்பு இருப்பதால், இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.

அதன்படி, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கும், புதுவையில் ஒரு சில இடங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 20 செ.மீக்கு அதிகமான அதி கனமழை பெய்யலாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களுக்கும், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களுக்கும் ஆரெஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சேலம் திருச்சி, வேலூர், திருப்த்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 23ம்தேதியும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், வேலூர் திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 24ம்தேதியும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மிதமான மழை வரும் 27ம்தேதி வரை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று காலை முதல் விடாமல் மழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இன்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன-மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசம் என்பதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை உள்பட 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், புதுவை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.