ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட சந்தை பனந்தோப்பு நேரு தெருவை சேர்ந்தவர் ரமணி (45). இவர் ஆத்தூர்குப்பம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தூய்மைபணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் விஜயன் நாட்றம்பள்ளி பேரூராட்சியில் தூய்மை பணியாளர். இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரமணியின் மகன் பாரத் குடும்ப தேவைக்காக ஏரிக்கோடி பகுதியை சேர்ந்த பைனான்சியர் ராஜசேகரிடம் கடந்த மாதம் ரூ.5 ஆயிரத்தை வட்டிக்கு வாங்கினாராம்.
2 நாட்களுக்கு முன்பு ராஜசேகர் நண்பர்களுடன் போதையில் ரமணியின் வீட்டிற்கு வந்து, ரமணியிடம் பணத்தை கேட்டுள்ளார். அவர் வெளியூர் சென்றுள்ள மகன் திரும்பி வந்ததும் கொடுப்பதாக கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்து ராஜசேகர், ரமணி மற்றும் அவரது கணவர் விஜயனை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த ரமணி, விஷம் குடித்து மயங்கி விழுந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமணி நேற்றுமுன்தினம் இறந்தார். இந்நிலையில் நேற்று மாலை ரமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பைனான்சியரை கைது செய்ய வலியுறுத்தி நாட்றம்பள்ளி- வாணியம்பாடி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.