கடன் விகிதம் அதிகரித்தது யார் ஆட்சியில்?: சட்டப்பேரவையில் புள்ளி விவரங்களுடன் விளக்கிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!!
சென்னை: அதிமுக ஆட்சியில் விட்டுச் சென்ற கடனுக்கும், ரூ.1.40 லட்சம் கோடி வட்டியாக இந்த ஆட்சியில் செலுத்தியுள்ளோம் என சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி எழுப்பிய கேள்விகளுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை மூன்றாம் நாள் அமர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு;
தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்கினாலே, கடன் சுமையில் சுமார் ரூ.3 லட்சம் கோடி குறையும். 2020 - 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கால முடிவில் வாங்கப்பட்ட கடனுக்கு திமுக அரசு வட்டி கட்டி வருகிறது. அதிமுக விட்டுச்சென்ற கடனுக்கு மட்டும் ரூ.1.4 லட்சம் கோடி ரூபாய் வட்டி கட்டியுள்ளோம்.
அதிமுக ஆட்சியில் மொத்த கடன் இருப்பு 128 சதவீத அளவிற்கு கடன் அதிகரித்தது. ஆனால் திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டில் 93 சதவீதம்தான் கடன் அதிகரித்துள்ளது. அந்தவகையில் 128 சதவீதம் அதிகமா 93 சதவீதம் அதிகமா?. மொத்த கடன் இருப்பு 128 சதவீதம் அதிகரிக்க செய்த நீங்கள் கடன் பற்றி பேச தார்மீக உரிமை இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் நம்முடைய நிதி நிர்வாகம் இதற்கு காரணமாக இல்லை. சேராத இடங்களில் சேர வேண்டாம் என்று சொன்னதை மறந்து விட்டு நீங்கள் போய் சேர்ந்த கட்சி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தொடர்ச்சியாக செயல்படுகிறது என கூறினார்.