*எலும்பு கூடாக கண்டெடுப்பு
ஊட்டி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கார்குடி வனப்பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்தது.வனப்பரப்பு மிகுந்த முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு உள்ளது.
இந்நிலையில் இக்காப்பகத்திற்கு உட்பட்ட உள் மண்டல பகுதியான ஊட்டி கோட்டம், கார்குடி வனச்சரகம், கும்பாரக்கொல்லி வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது கல்லள்ளா பள்ளத்தில் காட்டு யானை ஒன்று இறந்து அதன் உடல் மக்கி போய் எலும்பு கூடாக கிடந்ததை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலின் பேரில் துணை இயக்குநர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.தெப்பகாடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு அலுவலர் சரவணன், வனப்பணியாளர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் முன்னிலையில் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
முதற்கட்ட ஆய்வில் இறந்து கிடந்தது பெண் யானை என்பதும், வயது சுமார் 35 இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இறப்பிற்கான சரியான காரணம் அறிய முடியவில்லை என்பதால் பிரேத பரிசோதனை முடிவிற்கு பின்னரே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.