பொலோக்னா: டேவிஸ் கோப்பை ஆடவர் டென்னிஸ் போட்டியில் இத்தாலி அணி ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் இத்தாலியின் பொலோக்னா நகரில் நடந்து வந்தன. நேற்று முன்தினம் நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் ஸ்பெயின் அணி, ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதையடுத்து, இறுதிப் போட்டியில் இத்தாலி - ஜெர்மனி அணிகள் மோதின. இத்தாலி அணியில் நட்சத்திர வீரர் ஜேனிக் சின்னர் இடம்பெறவில்லை. அதேபோல், ஸ்பெயின் அணியில் உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் இடம்பெறவில்லை. இருப்பினும், இத்தாலியின் மேட்டியோ பெரெடினி, ஸ்பெயின் வீரர் கெரெனோ புஸ்டாவை, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு இத்தாலி வீரர் பிளேவியோ கோபோலி, ஸ்பெயின் வீரர் ஜாமே முனாரை, 1-6, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இதனால், இத்தாலி அணி, 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து 3வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. தவிர, கடந்த 1976ம் ஆண்டு நடந்த போட்டியிலும் இத்தாலி வென்றுள்ளது. ஒட்டு மொத்தத்தில் டேவிஸ் கோப்பையை அந்த அணி 4 முறை வென்றுள்ளது. முதல் முறையாக தற்போது, சொந்த மண்ணில் இத்தாலி வெற்றிக் கனியை பறித்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது. டேவிஸ் கோப்பையை 6 முறை வென்றுள்ள ஸ்பெயின் அணி, 2019ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.



