குடும்ப பிரச்னையில் விபரீத முடிவு; 7 வயது மகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் கழுத்தறுத்து சாக முயன்ற தந்தை: ஆலந்தூர் ஓட்டலில் பயங்கரம்
ஆலந்தூர்: ஆலந்தூரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் 7 வயது மகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் கழுத்து அறுத்து முயன்ற தந்தைக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்னையில் இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சதீஷ் (38). இவர் ஸ்பீக்கர் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரெபேக்கா (32). இவர்களுக்கு ஸ்டெஃபிரூஸ் (7) என்ற மகள் இருந்தார். இவர் 4ம் வகுப்பு படித்துவந்தார். இந்தநிலையில், தம்பதி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டதால் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பிரிந்து வாழ்ந்துவந்துள்ளதாக தெரிகிறது. ஆனால்
குழந்தை தந்தையுடன் இருந்துள்ளது. நேற்றிரவு சதீஷ் மகளை அழைத்துக்கொண்டு ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் 213வது அறையில் தங்கியிருந்துள்ளார்.
இன்று அதிகாலை ஐந்து மணிக்கு சதீஷ், தனது சகோதரி கெசியாவுடன் செல்போனில் தொடர்பு கொண்டு, பேசும்போது, ‘’ஆலந்தூரில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளதாகவும் மகள் ஸ்டெஃபிரூசை கழுத்து அறுத்து கொன்றுவிட்டேன். சிறிது நேரத்தில் நானும் தற்கொலை செய்யப்போகிறேன்’ என்று தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த சகோதரி உடனடியாக ஓட்டல் மேலாளரை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்து தனது அண்ணன் தங்கியுள்ள 213வது அறைக்கு சென்று பார்க்கும்படி கூறிவிட்டு அவரும் உடனடியாக ஒரு ஆட்டோவில் ஓட்டலுக்கு விரைந்துள்ளார். இதன்பிறகு கெசியாவும் ஓட்டல் மேலாளரும் நேராக சென்று அறையின் கதவை திறந்து பார்த்தபோது கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் குழந்தை ஸ்டெஃபி ரூஸ் இறந்துகிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் உடல் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சதீஷ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பரங்கிமலை காவல்நிலைய ஆய்வாளர் சுரேஷ் போலீசாருடன் விரைந்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சதீஷை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து பரங்கிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். மகள் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தந்தை கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.