Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பம்பிள் டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணிடம் நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன் கைது: திடுக்கிடும் தகவல் அம்பலம்

கோவை: பம்பிள் டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகனை போலீசார் கைது செய்தனர். அவரை பற்றிய பல்வேறு திடுக்கிடும் தகவல் வௌியாகி உள்ளது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஜோதி நகரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் கடந்த 6 மாதமாக பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி ரேஸ்கோர்சில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் செல்போனில் பம்பிள் என்ற டேட்டிங் ஆப் மூலம் பழகிய தனுஷ் அறிமுகமாகி காரில் அழைத்து சென்று, மற்றொரு நண்பருடன் சேர்ந்து மிரட்டி தலா ஒரு பவுன் மோதிரம், பிரேஸ்லெட், செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். மேலும் ரூ.90 ஆயிரத்தையும் ஆன்லைன் மூலம் பெற்றுள்ளனர். பின்னர் தனுஷ், அவரை கோவை அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் புக் செய்து அனுப்பி வைத்தார். அங்கிருந்து இளம்பெண் தகவலின்படி சகோதரி வந்ததும் இருவரும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர்.

ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்று மிரட்டி பணம் பறித்த தனுஷ் திண்டுக்கல் போலீஸ் டிஎஸ்பி தங்கப்பாண்டியன் மகன் என்பது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்ததையடுத்து தனுஷ் தலைமறைவானார். போலீசார் தீவிரமாக தேடி தனுசை நேற்று கைது செய்தனர். தற்போது அவரைப்பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. தனுஷ் கோவை ஈச்சனாரி பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் பம்பிள் உள்ளிட்ட சில டேட்டிங் ஆப்கள் மூலம் இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை குறி வைத்து பழகி உள்ளார். இதற்காக விதவிதமான புகைப்படங்களை தனது புரொபைல் படமாக வைத்து இருந்தார். அதை பார்த்த பெண்கள் அவரிடம் மயங்கி பேசியுள்ளனர்.

அவர்களிடம் தான் வழக்கறிஞருக்கு படித்து வருவதாகவும், கோவை அரசு வழக்கறிஞருக்கு உதவியாளராக இருப்பதாகவும், தந்தை போலீசில் உயர் அதிகாரியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்களை குறி வைத்து நைசாக பேசி லாங் டிரைவ் செல்லலாம் என அழைத்துச் சென்றுள்ளார். காரின் பின்சீட்டில் நண்பரை மறைவாக அழைத்துச் சென்று, சரியான சந்தர்ப்பத்தில் பெண்களை மிரட்டி நகை பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள் குடும்ப சூழ்நிலையால் புகார் அளிக்காமல் இருந்தது தனுஷ் மற்றும் அவரது கூட்டாளிக்கு சாதகமாகி உள்ளது. இதனால் தனுஷ் தனது முழு நேர தொழிலாக இதையே செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார், யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனுஷின் நண்பரையும் தேடிவருகின்றனர்.