புதுடெல்லி: “இலங்கையில் இருள் சூழ்ந்த நேரத்தில் உதவிய நண்பன் இந்தியா” என இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளார். இலங்கை பிரதமராக கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி பதவி ஏற்ற ஹரிணி அமரசூரிய முதன்முறையாக நேற்று இந்தியா வந்துள்ளார். நாளை வரை இந்தியாவில் இருக்கும் ஹரிணி அமரசூரிய, பிரதமர் மோடி, வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவாரத்தை நடத்த உள்ளார்.
இந்நிலையில் டெல்லி வந்த ஹரிணி அமரசூரிய, நேற்று மதியம் டெல்லி பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் இந்து கல்லூரிக்கு சென்றார். அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடிய ஹரிணி அமரசூரிய, “கல்வியும், கருணையும் ஒன்றாக கைக்கோர்க்க வேண்டும். இரக்க குணமற்ற அறிவு முழுமை பெறாது” என்றார். தொடர்ந்து பேசிய இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, “ஜனநாயகம் என்பது ஒரு விளையாட்டு அல்ல, அதுவொரு கடின உழைப்பு. வீடுகளிலோ, அலுவலகங்களிலோ அல்லது நாடுகளுக்கு இடையிலோ தடைகளை ஏற்படுத்தாதீர்கள். மாறாக பாலங்களை உருவாக்குங்கள்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அத்துடன், “இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருள் சூழ்ந்திருந்த நேரத்தில் நிதி உதவி அளித்து உதவிய நண்பன் இந்தியா. இலங்கையின் பயணத்தில் இந்தியா எப்போதும் அசைக்க முடியாத கூட்டாளியாக உள்ளது” என நெகிழ்ச்சியுடன் கூறினார். ஹரிணி அமரசூரிய டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். கடநத 1991ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்றது குறிப்பிடத்தக்கது.