சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து. "மோன்தா" புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. மசூலிப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில் 730 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காக்கிநாடாவிலிருந்து 310 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது என்றும், இது மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மாலை அல்லது இரவு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரப்புயலாக மசூலிபட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது, 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோன்தா புயல் காரணமாக காக்கிநாடா துறைமுகத்தில் பெரிய அபாயத்தைக் குறிக்கும் 8ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் அபாயத்தைக் குறிக்கும் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
மோன்தா புயல் காரணமாக நேற்று மாலை முதலே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், காலை முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கான மழை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், குமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
