Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

"மோன்தா" புயல் எதிரொலி.. சென்னையில் நாள் முழுவதும் மிதமான மழை பெய்யும்; அச்சப்படத் தேவையில்லை: பிரதீப் ஜான்!!

சென்னை : சென்னையில் இன்று நாள் முழுவதும் அவ்வப்போது மிதமான மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மோன்தா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது சென்னைக்கு 560 கி.மீ தென் கிழக்கில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், "மோன்தா" புயல் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று நாள் முழுவதும் அவ்வப்போது மிதமான மழை பெய்யும். "மோன்தா" புயல் காரணமாக பெய்யும் மழையால் எந்த பாதிப்பும் இருக்காது, அச்சப்படத் தேவையில்லை. "மோன்தா" ஆந்திர மாநிலத்துக்கான புயல்; மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றும், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மோன்தா புயல் கரையை கடப்பதில் மாற்றம் இருக்காது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.