திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது மகன் அன்புமணிக்கும் சமீப காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. கட்சியில் அதிகாரம் மற்றும் யாருடன் கூட்டணி என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கட்சி மற்றும் சின்னம் யாருக்கு என்பதிலும் இரு தரப்புக்கும் போட்டி வலுத்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் அன்புமணி உறுதியாக இருக்கிறார். ஆனால் தமிழகத்தின் களநிலவரம் அறிந்த மருத்துவர் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம் பாமகவின் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு அதிமுகவும் தங்கள் பக்கம் இழுக்க காய் நகர்த்தி வருகிறது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் இன்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அக்டோபர் 24ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறும் தனது அண்ணன் சி.வி.ராதாகிருஷ்ணனின் மகன் அர்ஜுன் திருமணத்திற்கு அழைப்பு விடுத்து, அதற்கான திருமண அழைப்பிதழையும் சி.வி சண்முகம் வழங்கினார். அண்ணன் மகன் திருமண அழைப்பிதழை மருத்துவர் ராமதாசிடம் வழங்குவதற்காக சந்தித்த போதிலும், கூட்டணி மற்றும் அரசியல் நிலைவரம் குறித்தும் பேசி இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.