Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலம் அருகே இன்று அதிகாலை சந்தன மரத்தை வெட்டி கடத்திய கும்பல்: ஒருவர் சுற்றி வளைப்பு; 3 பேர் தப்பியோட்டம்

ஓமலூர்: சேலம் அருகே சந்தன மரத்தை வெட்டிக்கடத்திய ஒருவரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும் தப்பிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் செல்லப்பிள்ளை குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி. விவசாயியான இவரது வீட்டின் அருகே 10 ஆண்டுகள் பழமையான 2 சந்தன மரங்கள் இருந்தன. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு சாந்தியின் வீட்டிற்கு வந்த சிலர் அவரிடம் சந்தன மரத்தை 15ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கொள்கிறோம் என கேட்டு விலை பேசியுள்ளனர். ஆனால் சாந்தி மரத்தை விற்பனை செய்யும் எண்ணம் இல்லை என கூறிவிட்டார். இதனால் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை மரத்தை அறுக்கும் சத்தம் கேட்டு எழுந்த சாந்தி வீட்டின் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது சந்தன மரத்தை 4 பேர் வெட்டி எடுத்துச்செல்லும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

அவர் கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை அங்கு வரவழைத்தார். இதனை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அவர்களை அப்பகுதி மக்கள் துரத்திச்சென்றனர். இதில் ஒருவர் அவர்களின் பிடியில் சிக்கினார். மற்ற 3பேர் தப்பியோடி விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த சேர்வராயன் தெற்கு வனச்சரக அதிகாரிகள் மற்றும் ஓமலூர் போலீசார் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில், சாந்தி மரத்தை விலைக்கு கொடுக்காததால் அந்த கும்பல் சந்தன மரத்தை வெட்டிக்கடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்று அதிகாலை 1 மணியளவில் 4 பேர் அங்கு வந்துள்ளனர். பின்னர் மரம் அறுக்கும் மெஷினை கொண்டு அங்கிருந்த ஒரு சந்தன மரத்தை முதலில் அறுத்துள்ளனர். அந்த மரத்தை தாங்கள் வந்த வண்டியில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் அங்கிருந்த மற்றொரு சந்தன மரத்தை அறுக்கும் பணியில் ஈடுபட்டபோது சத்தம் கேட்டு சாந்தி எழுந்ததால் அவர்களில் ஒருவர் சிக்கியதும், மீதம் உள்ள 3 பேர் தப்பிச்சென்றிருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பொதுமக்களிடம் சிக்கிய நபரை போலீசார் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர் தர்மபுரி மாவட்டம் மன்னேரி கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (50) என்பதும், சந்தன மரங்களை வெட்டிக்கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மாதேசை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பிய பாப்பாரப்பட்டியை சேர்ந்த முருகன் உள்பட 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் வெட்டிக் கடத்திச்சென்ற சந்தன மரத்தை கொண்டு சென்றனர் எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.