கடலூர் ரயில் விபத்துக்கு விதிகளை மீறி கேட் கீப்பர் செயல்பட்டதாக ரயில்வே ஒப்புதல்; பங்கஜ் குமார் கைது!!
கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில், திராவிட மணி மகள் சாருமதி (16), விஜயசந்திரகுமார் மகன் விமலேஷ்(10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், ஓட்டுநர் சங்கர் (47), தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த விஷ்வேஸ் (16), நிவாஸ் (13), சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த செழியன் (15) ஆகியோர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது சிகிச்சைப் பலனின்றி செழியன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் செம்மங்குப்பம் பகுதியில் பணியாற்றிய கேட் கீப்பர் மீது ரயில்வே அதிகாரிகள் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைய் எடுத்துள்ளனர். இதையடுத்து, தமிழக காவல்துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்துக்கு கேட் கீப்பர் பங்கஜ் குமார் சர்மாவை பிடித்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக பள்ளி வேன் மீது ரயில் மோதியது குறித்து ரயில்வே வெளியிட்ட 2 அறிக்கைகளில் முரண்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. முதல் அறிக்கையில் கேட் கீப்பர் ரயில்வே கேட்டை மூட முயன்றபோது வேன் ஓட்டுனர் கேட்டுக் கொண்டதால் அனுமதித்ததாக விளக்கம் அளித்தது. தற்போது கேட் கீப்பர் பங்கஜ் குமார் விதிகளை பின்பற்றாததுதான் விபத்துக்கு காரணம் என்று ரயில்வே ஒப்பு கொண்டுள்ளது. கேட் கீப்பர் பங்கஜ் குமார் தவறு செய்தது விசாரணையில் உறுதியானால் பணியில் இருந்து நீக்கப்படுவார் என ரயில்வே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


