Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பங்களை சந்திக்க வரும் 17ம் தேதி கரூர் செல்கிறார் நடிகர் விஜய்; தொண்டர்களுக்கு தடைவிதிப்பு

சென்னை: கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பங்களை சந்திக்க நடிகர் விஜய் வருகிற 17ம் தேதி கரூர் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது ரசிகர்கள், நிர்வாகிகள் யாரும் வரக்கூடாது என்று தடை விதித்துள்ளார். நடிகர் விஜய், கடந்த சில மாதங்களாக மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வந்தார். கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் அவர் பிரசாரத்துக்கு சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 41 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். மேலும், சமூக வலைதளங்களில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 15 நாட்களாக பனையூரில் உள்ள வீட்டுக்கும் பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கும் விஜய் தினமும் போய் வருகிறார். ஆனால் பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வது இல்லை. விஜயை பார்க்க வந்த ரசிகர்களும், பொதுமக்கள்தான் 41 பேர் உயிரிழந்தனர்.

ஆனால் அவர்களது உயிரிழப்புக்கு ஆறுதல் கூற அவர் மட்டுமல்ல அவரது கட்சி நிர்வாகிகள் கூட வரவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மாநில அரசும் தனது வாதத்தை வைத்தது. இந்தநிலையில் வருகிற 17ம் தேதி கரூர் செல்ல விஜய் திட்டமிட்டுள்ளார். அன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி செல்கிறார். பின்னர் காரில் கரூர் செல்கிறார். இந்த பயணத்தின்போது தன்னை சந்திக்க யாரும் வரக்கூடாது என்று நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் விஜய் தடை விதித்துள்ளார்.

கரூரில் காலை 10 மணிக்கு திருமண மண்டபத்தில் அல்லது கல்லூரி அரங்கில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒரு ேடபிள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு டேபிளுக்கும் சென்று அவர்களுடன் விஜய் பேசுவார். கடைசியாக 41 பேரின் படங்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்துகிறார். ஒரு மணி நேரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பின்னர் அவர் திருச்சிக்கு காரில் புறப்பட்டுச் செல்கிறார். திருச்சியில் இருந்து தனி விமானத்தில் சென்னை திரும்புகிறார். அவர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கரூர் போலீசார் செய்து வருகின்றனர்.