கூட்டநெரிசலை கட்டுப்படுத்த தவறினால் ரூ.1 கோடி அபராதம், 7 ஆண்டு சிறை: கர்நாடக சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்!!
பெங்களூரு: கர்நாடகாவில் கூட்டநெரிசலை கட்டுப்படுத்த தவறினால் ரூ.1 கோடி அபராதம், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பெங்களூரு கிரிக்கெட் மைதான சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆர்.சி.பி., அணி ஐ.பி.எல்., கோப்பையை வென்றதை கொண்டாடும் நிகழ்ச்சியின் போது, பெங்களூரு சின்னசாமி மைதானம் முன்பு கடந்த ஜூன் 4ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்தனர். இதன் எதிரொலியாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நிலையான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டது.
இந்நிலையில் சட்டசபையில் கர்நாடக கூட்ட கட்டுப்பாடு மசோதா - 2025 நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள்:
*ஒரு நிகழ்ச்சியில் 7,000 பேர் கலந்து கொள்வதாக இருந்தால், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அனுமதி பெற வேண்டும்.
*7,000 பேரை தாண்டி 50,000 பேருக்கு உட்பட்டு இருந்தால், டி.எஸ்.பி.,யிடம், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அனுமதி பெறுவது அவசியம்.
*50,000 பேரை தாண்டும் போது எஸ்.பி., அல்லது துணை போலீஸ் கமிஷனர்களிடம் அனுமதி பெறுவது அவசியம்.
*நிகழ்ச்சிக்கு 10 நாட்களுக்கு முன்பே ஏற்பட்டாளர்கள், முழு விபரங்களையும் எழுத்து மூலமாக சமர்பிக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், மக்கள் கூட்டம் சீராக வெளியேற வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
*பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டாலோ, இறப்பு நிகழ்ந்தாலோ நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தான் முழு பொறுப்பு.
*போலீஸ் அனுமதியின்றி பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தாலோ, ஏற்பாடு செய்ய முயற்சித்தாலோ, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வோருக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு கோடி ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
*கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் இருக்கும் போலீசார் பணிக்கு தொந்தரவு செய்தால் ரூ.50,000 அபராதம் வசூலிக்கப்படும்.