*போலீசார் தீவிர விசாரணை
ராமேஸ்வரம் : பறக்கும் அணில்கள், பந்தய புறாக்கள், ஆப்ரிக்க காதல் கிளிகள் இலங்கைக்கு கடத்தப்பட்டது குறித்து ராமேஸ்வரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை, தலைமன்னார் மாவட்டம் பேசாலை பகுதியில் தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 8 பறக்கும் அணில்கள், 220 பந்தய புறாக்கள், 20 ஆப்ரிக்க காதல் கிளிகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அந்நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், இவற்றை ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்து கடத்தி வந்து, இலங்கை கடல் எல்லையில் பெற்றுக் கொண்ட 3 பேரும் பைபர் படகு மூலம் தலைமன்னார் கடற்பகுதிக்கு கொண்டு வந்ததாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ராமேஸ்வரத்தில் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


