திருப்பூர்: பல்லடம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொலையுண்ட ஐடி ஊழியரின் மனைவி, உறவினர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் ஒன்றியம் சேமலைக்கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமேலு (75), மகன் செந்தில்குமார் (46) ஆகிய 3 பேரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி தோட்டத்து வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் இந்த கொலை சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 100 நாட்கள் கடந்தும் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து கோவை மண்டல சிபிசிஐடி எஸ்பி ஸ்ரீதேவி தலைமையில் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அப்போது கொலை செய்யப்பட்ட கோவையில் ஐடி ஊழியராக பணிபுரிந்த செந்தில்குமாரின் மனைவி கவிதா (34), அவர்களது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கொலை நடந்த பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.