Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.1 லட்சத்திற்கு குழந்தையை விற்ற தந்தை, தம்பதி கைது

தேனி: தேனி அருகே ரூ. 1 லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தையை மீட்கப்பட்ட விவகாரத்தில் தந்தை, தம்பதி கைதாயினர். தேனி அருகே உப்புக்கோட்டையை சேர்ந்தவர் சங்கர் (30). இவரது 2வது மனைவி பாண்டீஸ்வரி. கடந்த 35 நாட்களுக்கு முன்பு பாண்டீஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை சங்கர் நேற்று முன்தினம் இரவு ஒருவருக்கு விற்று விட்டதாக, தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள், வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசாரும், குழந்தை பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளும் சங்கர், பாண்டீஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், சங்கரின் சொந்த ஊரான மதுரை மற்றும் அருப்புக்கோட்டை, தேனி, போடி ஆகிய பகுதிகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு குழந்தை விற்பனை குறித்து சங்கர், ஒரு நபருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

சிக்னலை வைத்து கண்காணித்த போலீசார், போடிக்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் போடி அருகே பி.ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்(42), அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரி (38) ஆகியோர், சங்கரிடம் இருந்து குழந்தையை விலைக்கு வாங்கியது தெரியவந்தது. இதனை அடுத்து சிவக்குமார் வீட்டுக்கு சென்ற போலீசார், குழந்தையை மீட்டனர். பின் சிவகுமார், அவரது மனைவி உமா மகேஸ்வரி மற்றும் சங்கர் ஆகியோரை பிடித்து தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், போடியில் சிவகுமார் நடத்தி வந்த ஓட்டலுக்கு அடிக்கடி சங்கர் சென்று வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, சிவகுமார் தனக்கு குழந்தை தேவைப்படுவதாகவும், கிடைத்தால் ரூ.1 லட்சம் தருவதாகவும் அவர் கூறியுள்ளார். பணத்திற்கு ஆசைப்பட்டு சங்கர் ரூ.1 லட்சத்தை பெற்றுக் கொண்டு, குழந்தையை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து தேனி அனைத்து மகளிர் போலீசார், சிவக்குமார், உமா மகேஸ்வரி, சங்கர் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.