சாயல்குடி: பலருடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக்கூறி மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்த துணை ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே நரிப்பையூர் வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகோபால். உத்தரகாண்ட்டில் எல்லை பாதுகாப்பு துணை ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடை சேர்ந்த ஜெர்மின் (36). இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 14 வயதில் மகள், 10 வயதில் மகன் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாட்டால், 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். கடந்த 17ம் தேதி நள்ளிரவு ஜெர்மின், வெட்டுக்காடு வீட்டில் குழந்தைகளுடன் இருந்தபோது அங்கு முகத்தை துணியால் மூடி வந்த 2 மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து ஜெர்மின் பெற்றோர் அளித்த புகாரில், ‘‘ஜெர்மினை அவரது கணவர் விஜயகோபால் தான் ஆள் வைத்து கொலை செய்துள்ளார்’’ என கூறியிருந்தனர். இதனால் உத்தரக்காண்ட்டில் பணியில் இருந்த விஜயகோபாலை, சாயல்குடி போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து விஜயகோபால் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவிக்கையில், ‘‘திருமணம் ஆகி குழந்தை பிறந்த சில ஆண்டுகளிலேயே எனக்கும், ஜெர்மினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஜெர்மின் பெயரில் வீடு கட்டியதால், அவர் வீட்டை அபகரித்துக் கொண்டார். விவாகரத்து கோரிய அவர், தனக்கு மாதந்தோறும் ரூ.17,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
இந்த நிலையில் அவர், பலருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் எனது குடும்பத்தினருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. இதனால் கூலிப்படையை ஏவி கொன்றேன் என விஜயகோபால் கூறினார்’’ என்றனர். இதையடுத்து விஜயகோபாலை போலீசார் கைது செய்தனர். அவரது தந்தை வயணன் உள்ளிட்ட 4க்கும் மேற்பட்டோருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.