கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. 34 வயதான இவர் காயம் காரணமாக பார்மை இழந்து தவிப்பதுடன் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பை இழந்தார். ஆசிய கோப்பை தொடரிலும் அவர் சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் ஓய்வை அறிவிப்பாரா என தகவல் பரவி வருகிறது. இதுபற்றி முகமது ஷமி கூறுகையில், ``யாருக்காவது ஏதாவது பிரச்னை இருந்தால், நான் ஓய்வு பெற்றால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக மாறுமா என்று சொல்லுங்கள். யாருடைய வாழ்க்கை என்னால் மாறப்போகிறது என்று சொல்லுங்கள், அதில் நான் ஓய்வு பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? நான் சலிப்படையும்போது, ஓய்வை அறிவிப்பேன். என்னை சர்வதேச போட்டிகளில் தேர்வு செய்யாவிட்டாலும் நான் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன்.
நான் எங்காவது விளையாடுவேன். எனக்கு ஒரே ஒரு கனவுதான் மீதமுள்ளது, அது ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வது. அந்த அணியின் ஒரு பகுதியாக இருந்து, ஒருநாள் உலகக் கோப்பையை வென்று அதை வீட்டிற்குக் கொண்டு வரும் வகையில் சிறப்பாகச் செயல்பட விரும்புகிறேன். 2023ல் நாங்கள் பைனல் வரை வந்து தோற்றோம். தற்போது நீண்ட ஸ்பெல்களை வீசுவதில் எனது கவனம் உள்ளது. நான் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சி செய்துள்ளேன். ஜிம்மில் நிறைய பயிற்சி செய்துள்ளேன்’’ என்றார்.