கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே பொற்றையடியை சேர்ந்தவர் கணபதி (49). கிரேன் ஆபரேட்டர். இவர் நேற்று மாலை 3.30 மணியளவில் கிரேனில் விவேகானந்தபுரத்தில் இருந்து கடற்கரை சாலை நோக்கி சென்று கொண்டு இருந்தார். சர்ச் ரோடு அருகே திடீரென கிரேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது. அதன் பின்னரும் நிற்காமல் அஞ்சுகிராமம், மைலாடியை சேர்ந்த ஐயப்பன் மகன் சபரிகிரி (17) மீதும், பைக்கில் வந்த கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியை சேர்ந்த முகமது ஷான் (35) மீதும் மோதியது.
இதில் முகமது ஷான், கிரேன் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். தவெக நிர்வாகியான இவருக்கு திருமணமாகி 1 வருடம் தான் ஆகிறது. துணிக்கடை நடத்தி வந்தார். சபரிகிரி படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவர், கேட்டரிங் முதலாண்டு மாணவர் ஆவார். மேலும், 3 பைக்குகளை இடித்து தள்ளி கிரேன் நின்றது. தகவலறிந்து கன்னியாகுமரி எஸ்.பி. ஸ்டாலின் நேரில் வந்து விசாரித்தார்.