கடலூர்:கடலூர் முதுநகர் சேர்ந்தவர் கப்பல் அதிகாரி விமல். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 27 -ம் தேதி கடலூர் செல்லங்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் விமல் தனது சகோதரி தென்றல் என்பவருடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமல் அவரது சகோதரி தென்றல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இறந்த விமலின் தந்தை சிவலிங்கம், தாய் விஜயா ஆகியோர் கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர்கள் மூலம் நஷ்ட ஈடு கோரி கடலூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இறந்த விமல் குடும்பத்தாருக்கு ஒரு கோடி 62 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இறந்த விமல் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தொடங்கினர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரு கோடி 91 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வட்டி தொகையுடன் நஷ்ட ஈடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.