பேரவையில் அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து 6 துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை: சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து 6 துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அவ்வப்போது அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அது தவிர சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் எத்தனை செயலாக்கத்திற்கு வந்திருக்கிறது. அதில் எத்தனை திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்பது போன்றும் ஒவ்வொரு துறை வாரியாக தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று நீர்வளத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறப்பு முயற்சிகள் துறையின் செயல்பாடுகள் துறை குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட 6 அரசு துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார். இதில் ஒவ்வொரு துறைகளிலும் இதுவரை முடிக்கப்பட்டுள்ள பணிகள் எவ்வளவு? எத்தனை பணிகள் செயல்பாட்டில் உள்ளன? நிலுவையில் உள்ள பணிகள் எவ்வளவு? கைவிடப்பட்ட பணிகள் ஏதும் உள்ளதா? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் மற்றும் துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.