Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரூ.2000 கோடிக்கு சட்டவிரோத இருமல் மருந்து வர்த்தகம்: தலைமறைவு குற்றவாளிகளுக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’

லக்னோ: பல்வேறு மாநிலங்களில் நடந்தேறிய சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத இருமல் மருந்து வர்த்தகத்தை விசாரணை அமைப்புகள் தற்போது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. மருத்துவத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் இருமல் மருந்துகள், போதைப் பொருளாக மாற்றப்பட்டுச் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகக் கடந்த சில மாதங்களாகவே புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக அண்டை மாநிலங்களுக்குப் பெருமளவிலான மருந்துகள் விநியோகம் செய்யப்படுவதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது.

மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்பட வேண்டிய இவை, போதை கும்பல்களின் கைகளுக்குச் செல்வதைத் தடுக்கப் போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாகச் சந்தேகத்திற்குரிய சில நிறுவனங்கள் மற்றும் கிடங்குகளில் அதிகாரிகள் ரகசிய விசாரணையை முடுக்கி விட்டிருந்தனர். இந்நிலையில், நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத இருமல் மருந்து வர்த்தக வலைப்பின்னலை விசாரணை அமைப்புகள் தற்போது அம்பலப்படுத்தியுள்ளன. உத்தரப் பிரதேசம் மட்டுமின்றிப் பல்வேறு மாநிலங்களில் இந்த மோசடி கும்பல் வேரூன்றிச் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மெகா மோசடியில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதால், அவர்களைப் பிடிப்பதற்காக ‘லுக் அவுட் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; இந்த நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.