Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவுத் துறை வாயிலாக 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி பயிர்க் கடன்: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவுத் துறை வாயிலாக 66,24,955 விவசாயிகளுக்கு பயிர்க் கடன் ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் 1932ம் ஆண்டில் சென்னை மாகாண கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் ஏற்படுத்தப்பட்டு கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்கப்பட்டது. கூட்டுறவு சங்கங்களின் முக்கிய பணி பொதுமக்களுக்கும் தொழில் அமைப்புகளுக்கும் கடன் வழங்கி முன்னேற்றங்களுக்கு வழி வகுப்பதே ஆகும்.

கடன்களால் மக்கள் சிரமப்பட நேரும் காலங்களில் கடன்களை ரத்து செய்தும் உதவுகிறது அரசு. நகைக் கடன்களை தள்ளுபடி செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021 தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்று 31.3.2021 வரை நிலுவையிலிருந்த நகைக் கடன் தொகை ஏறத்தாழ ரூ.6,000 கோடி தள்ளுபடி செய்து ஆணையிட்டார். அதன்படி, 11.70 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி அளவிற்குத் தள்ளுபடிச் சான்றிதழுடன், அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில், 31.3.2021 அன்று நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,118.80 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு 1,01,963 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 10,56,816 மகளிர் பயன்பெற்றுள்ளனர். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.20 லட்சம் என்பதை ரூ.30 லட்சமாக உயர்த்தி 1,90,499 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10,997.07 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

பயிர்க் கடன்கள் ;

பயிர்க் கடன்களை உரிய கெடு தேதிக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-2022ம் ஆண்டு முதல் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த இதர பணிகளுக்குப் பராமரிப்புக் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தினார். 11,88,440 விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் அதன் தொடர்புடைய பணிகளுக்காக ரூ.6,372.02 கோடி கடன் வழங்கியுள்ளது திராவிட மாடல் அரசு.ஆண்டிற்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் 19,358 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.63.22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளைச் சுயசார்புடையவர்களாக மாற்றவும், நிதி சுதந்திரத்தை வளர்க்கவும், 47,221 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.225.94 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.சமூக நீதியை மேம்படுத்தும் வண்ணம் 16,578 பணிபுரியும் பெண்களுக்கு ரூ.470.01 கோடியும், 49,000 மகளிர் தொழில் முனைவோருக்கு ரூ.283.27 கோடியும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.நாட்டுப்புறக் கலைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு தொழில் புரிகின்ற கலைஞர்கள் நலிவடையாமல் காத்திட அக்கலைஞர்களின் சமூக, பொருளாதார, நிதி நிலையை மேம்படுத்தும் வண்ணம், இதுவரை 4,494 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.18.80 கோடி அளவிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அண்ணல் அம்பேத்கர் வணிக முன்னோடி திட்டம் என்னும் சிறப்புத் திட்டத்தை, 1.4.2023 முதல் நடைமுறைப்படுத்தினார். இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம், ரூ.52.34 கோடி கடன் உதவியுடன் துப்புரவுப் பணியாளர்களையும் தொழில் முனைவோராக்கும் வகையில், கொள்முதல் செய்யப்பட்ட கழிவுநீர் அகற்றும் வாகனங்களை 86 துப்புரவுப் பணியாளர்களுக்கு 6.12.2024 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில், வழங்கிப் பாராட்டினார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வாடகைக்கு விடப்படும் வேளாண் இயந்திரங்களைக் கூட்டுறவுத்துறையின் ”Coop E-வாடகை” செயலி, வேளாண்துறையின் “உழவர்” செயலி ஆகியவற்றிலும், நேரிலும் முன்பதிவு செய்துகொண்டு, ஏறத்தாழ 2 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், ரூ.392.52 கோடி அளவிற்குத் தானிய ஈட்டுக் கடன்களும், ரூ.2,089.90 கோடி அளவிற்கு நகைக்கடன்களும் வழங்கியுள்ளன. இச்சங்கங்கள், ரூ.10,283.21 கோடி அளவிற்கு வணிகமும் செய்துள்ளன.

2023ம் ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்களில் 2,403 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 2024ம் ஆண்டில் 2,527 விற்பனையாளர் மற்றும் 826 கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்காக 7.10.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. விற்பனையாளர் பணியிடத்திற்கு 2,47,306 விண்ணப்பங்களும், கட்டுநர் பணியிடத்திற்கு 35,421 விண்ணப்பங்களும் பெறப்பட்டு சென்னையைத் தவிர 37 மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை 9,132 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டும், 3,353 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கும் தொடர்புடைய மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2021-2022 சட்டமன்றப் பேரவை அறிவிப்பின்படி, தமிழ்நாடு முதலமைச்சரால் மாநிலம் முழுவதும் ஒரே விதமான வண்ணம் மற்றும் தனித்துவமான பெயர்ப் பலகைகளுடன் 70 புதிய மாதிரி கூட்டுறவு மருந்தகங்கள் 16.12.2021 அன்று திறந்து வைக்கப்பட்டு, ரூ. 39.87 கோடி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

1000 முதல்வர் மருந்தகங்கள்;

தமிழ்நாடு முதலமைச்சர் 2024 ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா உரையில் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும் இதன் மூலம் ஜெனரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள், நியூட்டராசெட்டிகல்ஸ், இந்திய மருந்துகள் 25 சதவீத தள்ளுபடி விலையில் மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இத்திட்டத்தின்படி, தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்கள் திட்டம் 24.2.2025 அன்று சென்னை மாநகரில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டன.

ஒன்றிய அரசின் விருதுகள்;

புதுடெல்லியில் நடைபெற்ற கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணைய விழாவில் 2022 மற்றும் 2023 ஆகிய இரு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கூட்டுறவுச் சங்கங்களின் கிடங்குகளைக் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்ததைப் பாராட்டி, இந்திய அரசின் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம் தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளின் சிறப்பான நிர்வாகத்தைப் பாராட்டி 2024-ல் 5 விருதுகள் வழங்கியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எல்லோர்க்கும் எல்லாம் என்னும் திராவிட மாடல் அரசின் கொள்கைப்படி கூட்டுறவு அமைப்புகள் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவு பாதுகாப்பை உறுதி செய்கின்றன. விவசாயிகளுக்குத் தேவையான பயிர்க் கடன்கள் முதலான இடுபொருள்களை வழங்கி, அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலைகள் கிடைப்பதையும் உறுதி செய்து ஒன்றிய அரசின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று கூட்டுறவுத் துறை மூலம் தமிழ்நாடு இந்தியத் திருநாட்டில் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.